தில்லி: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த போது, ரயில்வே பணிகளுக்கு லஞ்சமாக லாலு குடும்பத்துக்கு நிலம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுப்பப்பட்டது.
இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசாபாரதி ஆகியோர் மீது கடந்தாண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், கடந்த மாதம் லாலு பிரசாத்தின் மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வியிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தில்லி நீதிமன்றத்தில் இன்று புதிய குற்றப்பத்திரிகையை சிபிஐ காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த புதிய குற்றப்பத்திரிகையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் சிலரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 16 எதிர்க்கட்சிகளை இணைத்து பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வியும் கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.