

புது தில்லி: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மருத்துவத் துணைத் தேர்வு எழுத, கல்லூரி வளாகத்துக்கு வந்திருந்த நரேஷ் வாஷ்னோய் கைது செய்யப்பட்டார். இவரும், இவரது உதவியாளரும், நீட் தேர்வு எழுத பயிற்சி எடுத்து வரும் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வெழுதி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வை உண்மையானது போல போலியாகத் தயாரித்து இவர்கள் மோசடி செய்ய முயற்சி செய்தாலும், தேர்வறைக்குள், பையோ மெட்ரிக் முறையில் மாணவர்களை சோதித்தபோது, பையோ மெட்ரிக் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவருடன் ஒத்துப்போகாததால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு உதவியாக இருந்து வந்தவர் கடந்த மே மாதமே கைது செய்யப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்து வந்தார். தில்லியில் நேற்று இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.
அதாவது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயலும் மாணவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு, நீட் தேர்வெழுதும் மாணவர்களிடம், தாங்கள் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற்றுத் தருவதாகக் கூறி 5-7 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவரிடமும் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வெழுதி மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 7ஆம் தேதி தில்லியில் ஒரு நீட் தேர்வு மையத்தில், அமன் குமார் என்ற மாணவரின் பையோ மெட்ரிக் ஒத்துப்போகவில்லை என்று காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து, விரைந்து சென்று அமன் குமார் பெயரில் தேர்வெழுத வந்தவரை விசாரித்த போது, அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சு யாதவ் என்பதும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பிஎஸ்சி ரேடியோ-டையக்னாசிஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. வைஷ்ணோய் என்பவர் தான் தனக்கு ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுமாறு கூறியதாகவும் ஒப்புக் கொண்டார்.
அப்போதுதான் இந்த கும்பல் குறித்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அது முதல் வைஷ்ணோய் தேடப்பட்டு வந்த நிலையில், மற்றொரு மோசடி செய்த போது கைதாகியிருக்கிறார். அவரது சொந்த ஊர் கொல்கத்தா என்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.