'இந்தியா' கூட்டணி கட்சியினர் மணிப்பூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஷ்பு
மணிப்பூர் கலவரம் தொடங்கியது முதலே அதற்கு தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்றிருந்த நேரத்தில்கூட அவரை சாலை வழியாக சில பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி(இந்தியா) கட்சித் தலைவர்கள் மணிப்பூர் செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூருக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.