திருவனந்தபுரம்: மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி எம்எல்ஏவாக இருந்த புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் அவரது குடும்ப உறுப்பினர் போட்டியிடுவார் என கேரள காங்கிரஸ் கூறிவந்த நிலையில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டிஉம்மனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
79 வயாதன காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் காலமானாா்.
அவரது உடல் புதுப்பள்ளியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க சடங்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், பத்து ஆண்டுகள் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளாா் உம்மன் சாண்டி.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் காலியாக தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
உம்மன் சாண்டி மறைவை அடுத்து அத்தொகுதியில் நடத்தப்படும் இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் உம்மன் சாண்டியின் மகனா அல்லது மகளா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் உம்மன் சாண்டியின் குடும்பத்தில் ஒருவா்தான் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டிஉம்மனை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுப்பள்ளி தொகுதியில் இப்போதே இடைத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.