புதுதில்லி: மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் கெடுத்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியானது.
பி.பைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இக்கொடூரம், நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கியது.
இதன்பின்னர் அடுத்த நாளும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரு அவைகளிலும் பேச வேண்டும் எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் பிற அலுவல்களை ஒத்திவைத்து மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும்.
சுமார் 80 நாள்களுக்கு மேலாக மணிப்பூரில் தொடரும் வன்முறையால் சுமார் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என திருச்சி சிவா கொடுத்துள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.