புதுதில்லி: மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய விலை வீழ்ச்சி காரணமாக சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் முறையே 29 சதவிகிதம், 19 சதவிகிதம் மற்றும் 25 சதவிகிதம் குறைந்துள்ளன.
மக்களவையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சர்வதேச விலை குறைப்பின் முழு பலனும் நுகர்வோருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றார்.
முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் தொழில்துறையினருடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், சர்வதேச விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சில்லறை விலைகளைக் குறைக்க அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூலை 20, 2023 நிலவரப்படி, கச்சா சோயாபீன், கச்சா சூரியகாந்தி, கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் போன்ற முக்கிய சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலை கடந்த ஆண்டை விட கடுமையாக குறைந்துள்ளது.
அரசின் தொடர் முயற்சிகளால், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் ஆர்பிடி பாமோலியன் ஆகியவற்றின் சில்லறை விலைகள் முறையே 29.04 சதவிகிதம், 18.98 சதவிகிதம் மற்றும் 25.43 சதவிகிதம் குறைந்துள்ளன.
உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை பல முறை குறைத்துள்ளது.