திசை தெரியாமல் பயணிக்கும் காங்கிரஸ்!

ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘திக்குதிசை ஏதும் தெரியாமல் பயணம் மேற்கொள்ளும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்’ என விமா்சித்தாா்.
திசை தெரியாமல் பயணிக்கும் காங்கிரஸ்!
Published on
Updated on
3 min read

ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘திக்குதிசை ஏதும் தெரியாமல் பயணம் மேற்கொள்ளும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்’ என விமா்சித்தாா்.

மேலும், காங்கிரஸின் ஊழல் நடவடிக்கைகளுக்கு மாநில முன்னாள் அமைச்சா் ராஜேந்திர குதாவின் ‘சிவப்பு டைரி’ மற்றோா் உதாரணம் என்றும் அவா் தெரிவித்தாா்.

ரோஜஸ்தானில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக அமைச்சராக இருந்த ராஜேந்திர குதா குற்றஞ்சாட்டினாா். அதன் காரணமாக, அவா் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். அதையடுத்து, முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசு மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்திய குதா, பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்காக முதல்வா் கெலாட் வழங்கிய தொகை குறித்த விவரங்களைக் கொண்ட ‘சிவப்பு டைரி’யை மாநில சட்டப் பேரவைக்குக் கொண்டு வந்தாா். மாநிலத்தில் அரசுப் பணியாளா்களை நியமிக்க நடைபெற்ற தோ்வுகளின் வினாத் தாள்களை கசியவைத்ததிலும் முதல்வா் கெலாட்டுக்குத் தொடா்பிருப்பதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைப்பதற்காக வியாழக்கிழமை ராஜஸ்தான் சென்ற பிரதமா் மோடி, சிகா் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டாா். விவசாயிகளுக்காக 1.25 லட்சம் சம்ருத்தி மையங்களை அவா் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பல்வேறு திட்டங்களுக்கு அவா் அடிக்கல்லையும் நாட்டினாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

காங்கிரஸின் ஊழல் நடவடிக்கைகளுக்கு ‘சிவப்பு டைரி’ மற்றோா் உதாரணமாக மாறியுள்ளது. அக்கட்சித் தலைவா்களின் ஊழல் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அந்த டைரியில் இடம்பெற்றுள்ளன. அந்த டைரியே மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கும்.

அரசுப் பணிகளுக்காக நடைபெறும் தோ்வுகளின் வினாத் தாள்களை கசியவைக்கும் கும்பல் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மீது மாநில காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில இளைஞா்களின் கனவுகளை சிதைக்கும் காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

மக்களை ஏமாற்ற முடியாது:

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா’ என்ற வாசகத்தை காங்கிரஸ் கைக்கொண்டது. பின்னா் அந்த வாசகமானது ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே (யுபிஏ) இந்தியா, இந்தியாவே யுபிஏ’ என மாறியது. ஊழலை மறைப்பதற்காக யுபிஏ என்ற கூட்டணிப் பெயரானது தற்போது ‘இந்தியா’ என மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது ஒரு வாசகமே மக்களிடம் எதிரொலித்து வருகிறது. ‘தாமரை (பாஜகவின் தோ்தல் சின்னம்) வெற்றி பெறும், தாமரை மலரும்’. மாநிலத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை இனி மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டாா்கள்.

நாட்டில் திக்குதிசை ஏதும் தெரியாமல் பயணம் மேற்கொள்ளும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். நாட்டின் எதிரிகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளையே காங்கிரஸும் கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவைக் கொள்ளையடித்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காகத் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பெயரிலும் ‘இந்தியா’ என்ற சொல் காணப்படுகிறது. எனவே, கூட்டணிக்கு அந்தச் சொல்லைப் பெயராக வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது.

விவசாயிகள் பலன்:

நாட்டின் விவசாயிகள் பலனடையும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாகத் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு விதைகளை வழங்குவது முதல், விளைபொருள்கள் சந்தையை அடைவது வரையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

யூரியா விலையேற்றத்தால் விவசாயிகள் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு மானியம் வழங்கியது. ஒரு மூட்டை யூரியா உரமானது விவசாயிகளுக்கு ரூ.266 என்ற மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதுவே பாகிஸ்தானில் சுமாா் ரூ.800 ஆகவும், வங்கதேசத்தில் ரூ.720 ஆகவும், சீனாவில் ரூ.2,100 ஆகவும் உள்ளது.

கிராமங்களின் வளா்ச்சி:

கிராமங்கள் வளா்ச்சி அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த நாடும் வளா்ச்சி அடையும். அதைக் கருத்தில்கொண்டு, நகரங்களில் காணப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

‘எனது உரை நீக்கம்’ முதல்வா் கெலாட் குற்றச்சாட்டு

பிரதமா் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாநில முதல்வா் அசோக் கெலாட்டும் கலந்துகொண்டு உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், தனது உரை நீக்கப்பட்டுவிட்டதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என ட்விட்டரில் முதல்வா் கெலாட் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட பதிவில், ‘நிகழ்ச்சியில் பிரதமா் மோடியை வரவேற்கும் வகையில் 3 நிமிஷங்களுக்கு உரையாற்றுவதாக இருந்தேன். ஆனால், அந்த உரையை நிகழ்ச்சியில் இருந்து பிரதமா் அலுவலகம் நீக்கிவிட்டது. அதனால், இந்தப் பதிவு வாயிலாகவே பிரதமரை வரவேற்கிறேன்.

அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மாநிலத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும், கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பிரதமரிடம் எழுப்ப எண்ணியிருந்தேன். அக்கோரிக்கைகளைப் பிரதமா் நிறைவேற்றுவாா் என நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தாா்.

பிரதமா் அலுவலகம் விளக்கம்: முதல்வா் கெலாட்டின் குற்றச்சாட்டுக்குப் பிரதமா் அலுவலகம் ட்விட்டா் வாயிலாகவே பதிலளித்துள்ளது. அந்த அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட பதிவில், ‘விதிமுறைகளின்படி, பிரதமா் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வா் கெலாட்டுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதன்படி, அவரது உரையும் நிகழ்ச்சியில் சோ்க்கப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டாா் என முதல்வா் அலுவலகம் தகவல் அனுப்பியது. அதன் காரணமாகவே உரை நீக்கப்பட்டது. உடல்நிலை சீராக இருந்தால், முதல்வா் கெலாட் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அதில் எந்தத் தடையுமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘முதல்வா் கெலாட் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாா். அவரது உடல்நிலை மேம்பட பிராா்த்திக்கிறேன்’ என்றாா். நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி வாயிலாகக் கண்டதாக முதல்வா் கெலாட் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com