இளநிலை நீட் தேர்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தில்லியின் அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வானதையடுத்து அவர்களுக்கும், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவிலான சாதனையை நினைத்து கூட பார்த்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தில்லியிலிருந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற முடிவுகளை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அவர்களர்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தில்லியிலிருந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியலையும் கேஜரிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 1,074 பேர் தில்லியிலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 40-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு (2022) தில்லி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 648 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2021 ஆம் ஆண்டில் 496 பேரும், 2020 ஆம் ஆண்டில் 569 பேரும் தில்லியிலிருந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க: அமரீந்தர் சிங்குடன் ஜெ.பி.நட்டா சந்திப்பு!
இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 20.38 லட்சம் மாணவர்களில் 11.45 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 48 சதவிகிதம் அதிகமாகும். இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் முழுப் மதிப்பெண்கள் (720 மதிப்பெண்கள்) பெற்று முதலிடம் பிடித்தனர்.
இந்திய முழுவதும் 499 நகரங்களில் 4,097 தேர்வு மையங்களில் இளநிலை நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.