பிபர்ஜாய் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சித் தொழிலாளர்கள் உதவுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை மணிக்கு 6.30 மணியளவில் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசித் தொடங்கி படிப்படியாக அதிகரித்தது. பல்வேறு இடங்களில் கட்டடங்களில் மேற்கூரைகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன. பிபர்ஜாய் புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளது, 442 கிராமங்களில் வசிக்கும் 19,12,337 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
ஆம் ஆத்மி கட்சித் தொழிலாளர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும், மக்களுக்கு உதவவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மணிப்பூரின் நிலைமை கவலை அளிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்துவரும் வன்முறைக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை விதித்ததோடு, இணையத்தையும் தடை செய்துள்ளது.
மணிப்பூரின் நிலைமை முழு நாட்டிற்கும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அங்கு அமைதியை மீட்டெடுக்க மத்திய அரசு பல முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.