சண்டிகர்: புதுதில்லி முதல் பானிபட் வரையிலான 8 வழி தேசிய நெடுஞ்சாலையில் 11 மேம்பாலங்களை மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை திறந்து வைப்பார் என்று ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார்.
மேலும் ரூ.3,700 கோடி மதிப்பிலான முக்கிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்னல் மாவட்டத்தில் உள்ள குடெய்ல் கிராமத்தில் கர்னல் கிரீன் ஃபீல்ட் ஆறு வழி வட்டச்சாலை திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் மொத்த நீளம் 35 கி.மீ ஆகும். சுமார் ரூ .1,700 கோடி செலவாகும்.
இதேபோல் அம்பாலா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்லி கிராமத்தில் அம்பாலா கிரீன் ஃபீல்ட் ஆறு வழி வட்டச்சாலை திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்தின் மொத்த நீளம் 23 கி.மீ ஆகும். இதற்கு மொத்தம் ரூ.1,100 கோடி செலவாகும்.
சாலை கட்டமைப்பை அரசு வலுப்படுத்தி வருகிறது என்று ஹரியாணா துணை முதல்வர் தெரிவித்து வரும் நிலையில், இந்த மூன்று முக்கிய சாலைத் திட்டங்கள் மாநிலத்தின் உள்கட்டமைப்பின் தோற்றத்தை மாற்றி, தொழில் வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்றார்.