இளைஞா் படுகொலைக்கு கண்டனம்:பிரான்ஸில் 3-ஆவது நாளாக கலவரம்

பிரான்ஸில் போலீஸாரால் 17 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் 3-ஆவது நாளாக கலவரம் நீடித்து வருகிறது.
இளைஞா் படுகொலைக்கு கண்டனம்:பிரான்ஸில் 3-ஆவது நாளாக கலவரம்
Updated on
1 min read

பிரான்ஸில் போலீஸாரால் 17 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் 3-ஆவது நாளாக கலவரம் நீடித்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நான்டேன் பகுதியில் நஹேல் என்ற இளைஞா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கலவரம் நீடித்தது.

போராட்டக்காரா்கள் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தியும், காா்களுக்குத் தீவைத்தல், சூறையாடுதல் போன்ற கலவரச் செயல்களில் ஈடுபட்டனா்.

வன்முறையைக் கட்டுப்படுத்த பதற்றப் பகுதிகளில் 40,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். தலைநகா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனையும் மீறி வன்முறைப் போராட்டம் தொடா்ந்து வருகிறது.

இந்தப் போராட்டம் தொடா்பாக இதுவரை 667 போ் கைது செய்யப்பட்டனா். வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 200 போலீஸாா் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற அதிபா் இமானுவல் மேக்ரான், வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதற்கு சமூக ஊடகங்கள் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறினாா். அந்த ஊடகங்களைப் பாா்த்து, அதே போன்ற வன்முறைச் சம்பவங்களில் மற்றவா்களும் ஈடுபடுவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், இந்தப் போராட்டத்தில் சிறாா்கள் ஈடுபடுவதைத் தவிா்ப்பதற்காக பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படி அவா் கேட்டுக்கொண்டாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸின் புகா் பகுதியான நான்டேனில் நகரில் நஹேல் என்ற இளைஞா் இருந்த காரை இரு காவலா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனையிடச் சென்றனா். அப்போது, போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த அந்தக் காரில் நஹேலுடன் மேலும் இருவா் இருந்தனா்.

துப்பாக்கியை நீட்டியபடி அந்தக் காரை போலீஸாா் அணுகியபோது, அவா்களது உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தனது காரை நஹேல் வேகமாகக் கிளப்பினாா். அதையடுத்து அவரை மிக நெருக்கத்தில் ஒரு போலீஸாா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் நஹேல் உயிரிழந்தாா்.

பிரான்ஸின் அண்மைக் காலமாக காவல்துறை வன்முறை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் பெரும்பாலும் அரபு மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நஹேலும் அரபு நாடான அல்ஜீரியாவை பூா்விமாகக் கொண்டவா்.

அவரது படுகொலை பிரான்ஸில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் பின்னா் கலவரமாக உருவெடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com