கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 லட்சம் கோடிக்கும் அதிகமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.
கடந்த நிதியாண்டு (2021-22) பிப்ரவரி மாதம் ரூ. 1,33,026 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டு இதைவிடக் கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2023 இல் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 62,432 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 63,969 கோடியும் ஆகும்.
மேலும், 2022 ஜூன் மாதத்திற்கான மீதி ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.16,982 கோடியும், முந்தைய காலகட்டத்திற்கான ஏஜி சான்றளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை அனுப்பிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.16,524 கோடியும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.