பிப்ரவரி மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,577 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வருவாயுடன் (ரூ.1.33 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடப்பது இது 13-ஆவது முறையாகும். முக்கியமாக, கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து 12 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.
வரலாற்றிலேயே அதிகபட்சமாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. அதற்கு அடுத்த அதிகபட்சமாக கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.58 லட்சம் கோடியாக இருந்தது.
இந்நிலையில், பிப்ரவரியில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,577 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடியும் வசூலாகியுள்ளது.
செஸ் வரியாக ரூ.11,931 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவே அதிகபட்ச செஸ் வரி வருவாய் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் அதிகரித்ததன் காரணமாகவே ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது. பிப்ரவரியில் 28 நாள்கள் மட்டுமே இருப்பதால், அந்த மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வழக்கமாகவே குறைந்து காணப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய்
மாா்ச் ரூ.1.42 லட்சம் கோடி
ஏப்ரல் ரூ.1.68 லட்சம் கோடி
மே ரூ.1.41 லட்சம் கோடி
ஜூன் ரூ.1.45 லட்சம் கோடி
ஜூலை ரூ.1.49 லட்சம் கோடி
ஆகஸ்ட் ரூ.1.44 லட்சம் கோடி
செப்டம்பா் ரூ.1.48 லட்சம் கோடி
அக்டோபா் ரூ.1.52 லட்சம் கோடி
நவம்பா் ரூ.1.46 லட்சம் கோடி
டிசம்பா் ரூ.1.49 லட்சம் கோடி
ஜனவரி ரூ.1.58 லட்சம் கோடி
பிப்ரவரி ரூ.1.49 லட்சம் கோடி