சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்

பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் மிகுந்த சுறுசுறுப்புடன் பணி செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது என்பதுதான் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதன் மூலம் கிடைத்திருக்கும் பாடம்.
சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்


பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் மிகுந்த சுறுசுறுப்புடன் பணி செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது என்பதுதான் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதன் மூலம் கிடைத்திருக்கும் பாடம்.

கடந்த வியாழக்கிழமை, சுஷ்மிதா சென், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து பதிவிட்டிருந்தார். ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்து இதய வால்வில் ஸ்டன்ட் பொறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம், மீண்டும் இதய நலன் குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒருவர் பார்க்க ஆரோக்கியமாக இருக்கிறார். மிகச் சிறந்த ஆரோக்கிய உணவு முறையைக் கைகொள்கிறார். உடற்பயிற்சி செய்கிறார். ஒடியாடி பணியாற்றுகிறார். சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பது மட்டுமே அவரது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான ஆதாரம் அல்ல. பிறகு வேறென்னதான் செய்ய வேண்டும்?

பார்க்க ஆரோக்கியமாக இருந்தால்..
பார்ப்பதற்கு ஆரோக்கியமாக, அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பது மட்டுமே நமது உடல்நலம் நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அது மிகவும் தவறு என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியம் என்பது பல காரணிகளின் கூட்டு. மனநிலை, உணர்வு, ஆழ்மனது அத்துடன் உடல் என அனைத்தும் சிறப்பாக இருப்பது அவசியம். 

யார் சிறந்தவர்?
ஒருவர் நாள்தோறும் மிகச் சிறப்பாக உடற்பயிற்சி செய்கிறார். ஆனால், அவரது ஆழ்மனதில் ஏராளமான அழுத்தங்கள் உள்ளன. ஆனால், ஒருவர் எப்போதாவது உடற்பயிற்சி செய்வார், ஆனால் அவரது மனம் மிக லேசாக அமைதியாக இருக்கிறது. இவர்களில் யார் ஆரோக்கியமாக இருப்பார்கள்.. நிச்சயம் முதலாமவராக இருக்க முடியாது என்கிறது முடிவுகள்.

மாரடைப்பு.. ஸ்டன்ட்
சுஷ்மிதா சென்றுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருக்கிறது. அவரது தமனி எனப்படும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அது சரி செய்ய அங்கு ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது. அதிக கொழுப்பு, ஆரோக்கியமற்ற வாழ்முறையுடன் அதிக மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் போன்றவை கூட்டு சேரும் போது  மாரடைப்புக்கான காரணங்களை உருவாக்கிவிடுகின்றன.  பெரும்பாலான ரத்த நாள அடைப்புகள் உரிய நேரத்துக்குள் கண்டறியப்படுவதேயில்லை.

பெண்களுக்கு அதிக கவனம் தேவை
பெண்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடல் எடை மிகவும் முக்கியம். கெட்டப் பழக்க வழக்கங்களை மறந்துவிடுங்கள். உணவுப் பழக்க வழக்கங்களை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்கள் இதய சிகிச்சை மருத்துவர்கள்.

ஈஸ்ட்ரோஜனுக்கும் முக்கிய பங்கு
மாதவிடாய் சுழற்சி நிறைவுபெறும் வயதில் இருக்கும் பெண்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். மாதவிடாய் சுழற்சி நிறைவு பெறும் வயதில் இருக்கும் பெண்களின் உடல் ஈஸ்ட்ரோஜனை குறைவாகவே சுரக்கும். இதுவும் இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். 

எனவே, மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்கள், தங்கள் இதய செயல்பாட்டை நன்கு கவனிக்க வேண்டும். மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் தான் வரும் என்றெல்லாம் கருதாமல் பெண்களுக்கும் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கட்டுப்பாடற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி செய்யும் வழக்கமே இல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமோ அதிகம்.

இது மட்டுமா?
பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில், மாதவிடாய் சுழற்சி முடிவது மற்றும் கர்ப்பக்கால பிரச்னைகளும் இணைந்துகொள்கின்றன. அதாவது ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்னை இருக்கும் பெண்களுக்கு இந்த இரண்டு காலங்களும் அதனை அதிகரிக்கச் செய்துவிடும்.

பெண்களுக்கு மாரடைப்பு வராதா?
இதய நோய் மருத்துவர்கள் இது பற்றி சொல்லும் கடைசி ஆறுதல் செய்தி என்னவென்றால், ஆண்களை விட பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவுதான். அது மட்டுமல்ல.. ஆணை விட 10 வயது அதிகமாகதான் பெண்களை இதய நோய் தாக்குமாம். ஒரு ஆண்கள் 45 வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டால் பெண்கள் 55 வயதில் பாதிக்கப்படுவார்கள்.

இன்னொரு நல்ல தகவல் என்னவென்றால், இதய நோய்க்கான அறிகுறிகள் பெண்களுக்கு அதிகம் தெரியவரும். அதாவது, பாரம்பரியமாக அறிகுறிகள் என்று கருதப்படும், நெஞ்சுவலியுடன் தோள்பட்டை வரை வலி பரவுதல், தாடை மற்றும் கழுத்துகளில் வலி ஏற்படுவது இருக்கும்.

இதனுடன் வித்தியாசமான அறிகுறியாக, மயக்கம், வயிறு உப்புசம், அதிக வியர்வை, பதற்றம், மூச்சு விட முடியாமல் போவது உள்ளிட்ட அறிகுறிகளும் பெண்களுக்கு ஏற்படும். எனவே, இவற்றை அறிந்து கொண்டு உடனடியாக பரிசோதனைகளை செய்து சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

எப்போது அலர்ட் ஆக வேண்டும்?
நடு நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அல்லது ஒரு நெருக்குதல் போன்ற உணவு ஒரு நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் நீடித்தால்.
நெஞ்சுப் பகுதியில்தான் வலிக்க வேண்டும் என்றில்லை. முகத்தின் தாடை, கழுத்து, தோள்பட்டை, இரண்டு கைகள், வயிற்றின் மேல்பகுதி
திடீரென மூச்சு விட முடியாமல் போவது அல்லது திடீர் குமட்டல்
நெஞ்செரிச்சல், மயக்கம், ஜீரண பாதிப்பு

எதற்கெல்லாம் பயப்பட வேண்டும்?
ரத்த அழுத்தம்
புகைப்பிடித்தல்
நீரிழிவு
அதிகக் கொழுப்பு
மன அழுத்தம்
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
உயர் ரத்த அழுத்தம் இருந்தால் நிச்சயம் பயப்பட வேண்டும். பயப்பட வேண்டும் என்றால் அதற்கு உரிய சிகிச்சை செய்து, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
அவ்வப்போது ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 
புகைப்பிடிப்பவராக இருந்தால் உடனடியாக அதனைக் கைவிடுங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். 
மன அழுத்தம் அல்லது உளைச்சலைக் கைவிட பயிற்சி எடுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com