புதுதில்லி: நாட்டில் புதிதாக 27 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை விரிவுபடுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்று தனது அதிவேக தொலைபேசி நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் 331 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதற்காக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மேலும் 27 நகரங்களில் தனது 5 ஜி சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்தது.
ஜியோ ட்ரூ 5 ஜி சேவையானது இப்போது ஆந்திரா, சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 27 கூடுதல் நகரங்களில் கிடைக்கிறது என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 8, 2023 முதல், இந்த 27 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஜியோவின் 5 ஜி சேவைகள் 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் சென்றுடையும் என்று அதன் தலைவர் முகேஷ் அம்பானி முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.