பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவா்கள் அனைவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுதலை செய்யப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுபாஷினி அலி உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசஃப், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், பில்கிஸ் பானு மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினா். அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com