இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இதுவரை சுமார் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் தற்போது இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மீண்டும் கலவரஙகள் வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அங்கு ராணுவம் டிரோன்கள் மற்றும் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காலை 7 மணி முதல் 10 மணி வரை தளர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதாகவும், சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பாலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நாகாலாந்து மாணவர்கள், உள்ளூர் மக்கள் என 676 பேரை நாகாலாந்து அரசும், அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றினர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.