ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய போர் விமானம் வீட்டின் மேல் விழுந்ததில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக மிக்-21 ரக போர் விமானம் இன்று காலை புறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹனுமன்கர் அருகே பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், வீட்டின் மேல் விழுந்துள்ளது.
இதில், விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், வீட்டின் அருகே இருந்த இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும், ஒரு ஆண் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, கடந்த வாரம் ராணுவத்தின் துருவ் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதன் சேவையை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.