பிகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகார் மாநிலம், அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்துள்ளது. இதுகுறித்து பள்ளியில் தகவல் பரவியதும், உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
இருப்பினும், ஏற்கெனவே உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதிய உணவாக மாணவர்களுக்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கிச்சடி' வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.