பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவல் துறையின் ரோந்துப் பகுதியில் குண்டுவெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தேரா இஸ்மாயில் கான் நகரில் போலீஸார் ரோந்து பணியின்போது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலியானதாகவும், 21 பேர் காயமடைந்தாக மீட்பு அதிகாரி அய்சாஸ் மெஹ்மூத் தெரிவித்தார்.
கடந்தாண்டு நவம்பரில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, அண்மை மாதங்களில், குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
அக்டோபர் 31ல் தேரா இஸ்மாயில் கானில் உள்ள போலீஸ் முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் போலீஸார் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில், தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் குண்டு வெடிப்பில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.