தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதையடுத்து 'மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எங்கே?' என தில்லி அமைச்சர் கோபால் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக 'மிகவும் மோசம்'(very poor) பிரிவில் இருந்த காற்றின் தரம் இன்று(வெள்ளிக்கிழமை) 'கடுமையான'(severe) பிரிவுக்குச் சென்றது.
தில்லியின் காற்றின் தரக் குறியீடு நேற்று(வியாழக்கிழமை) காலை 351 புள்ளிகளாக இருந்த நிலையில் இன்று காலை 471 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காற்றின் தரம் மோசமானதையடுத்து தில்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 முதல் 20 நாள்கள் கடினம் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தில்லியில் 'கடுமையான' பிரிவுக்குச் சென்ற காற்றின் தரம்!
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் கோபால் ராய், 'மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எங்கே? பாஜகவுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய லாரிகள், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் நிறுத்தம் என தில்லி அரசு தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய அவர், மத்திய அரசும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுகுறித்து அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.