தெலங்கானா அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா கல்வி அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டியின் பாதுகாப்பு அதிகாரி முகமது ஃபசல் அலி(59), ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு ஹோட்டலுக்கு அருகே இன்று காலை 7 மணியளவில் தனது சர்வீஸ் பிஸ்டலால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஃபசல் அலி தனது மகளுடன் காலை 6 மணியளவில் பணிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது மகளிடம் சில தனிப்பட்ட விஷயங்களை பேசிவிட்டு காலை 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் நிதி பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று மேற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அமைச்சரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.