கிருஷ்ணர் போதனைகளை உள்ளடக்கிய எம்பிஏ படிப்பு: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிமுகம்

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான மந்திரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு பிபிஏ-எம்பிஏ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 
கிருஷ்ணர் போதனைகளை உள்ளடக்கிய எம்பிஏ படிப்பு: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிமுகம்



உத்தரபிரசேதம்: அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான மந்திரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு பிபிஏ-எம்பிஏ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையில் இந்த கல்வி ஆண்டில் பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான போதனைகளை உள்ளடக்கிய ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பிபிஏ-எம்பிஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த படிப்பில் கிருஷ்ணரின் பகவத் கீதை, ராமாயணம், வேத உபன்யாசம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மேலாண்மை தொடர்பான கருத்தியல்களும் சேர்க்கப்பட்டு பாரம்பரிய முறையில் புதிய மேலாண்மை நுண்ணறிவுகளை வழங்கும் மேலாண்மை தொடர்பான படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இது மட்டுமின்றி, ஜே.ஆர்.டி.டாடா, அசிம் பிரேம்ஜி, அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்களின் ஸ்மார்ட் நிர்வாக முடிவுகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.

மேலும், பாதகமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க உதவுவதற்கான அஷ்டாங்க யோகாவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இந்திய நிர்வாகமா?
பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷெபாலி நந்தன் கூறுகையில், இந்திய மேலாண்மை சிந்தனை மற்றும் நடைமுறைகள் குறித்த குறிப்பிட்ட ஆய்வறிக்கையில், ஆன்மீகம் மற்றும் மேலாண்மை, கலாசார நெறிமுறைகள், மனித விழுமியங்கள் மற்றும் மேலாண்மை, அஷ்டாங்க யோகா, வாழ்க்கை, தியானம் மற்றும் மன அழுத்தம் குறித்த முழுமையான பாரம்பரிய ஆய்வுகளுடன் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொடக்க மேலாண்மை ஆகியவை பாடத்திட்டத்தில் முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், 26 மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று கூறினார். 

இந்த படிப்பில் மாணவர்கள் படிப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படும், முதலாமாண்டில் ஒருவர் படிப்பை விட்டு வெளியேறினால், அவருக்கு ஒரு வருட சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் டிப்ளமோ சான்றிதமும், மூன்றாம் ஆண்டில் வணிக நிர்வாகத்தில் பிபிஏ (இளங்கலை) பட்டமும் மற்றும் ஐந்தாம் ஆண்டில் எம்பிஏ (முதுகலை) பட்டமும் வழங்கப்படும். இது 10 பருவத் தேர்வுகளைக் (செமஸ்டர்கள்) கொண்டது என்று ஷெபாலி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com