காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான மனீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்தை வலியுறுத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, 70 மணி நேரம் இந்தியர்கள் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்திப் பேசினார்.
சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்திய இந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் மனீஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில், “நாராயணமூர்த்தியின் கருத்துக்கு இதற்கு இத்தனை கூச்சல் என எனக்கு புரியவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது. என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான பணியில் வாரம் ஏழு நாள்களும் நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரங்கள் வேலை செய்கிறோம். ஞாயிற்றுகிழமை நான் கடைசியாக விடுப்பு எடுத்தது எப்போது என எனக்கு நினைவில்லை. ஞாயிறும் எங்களுக்கு முழு வேலை நாள் தான். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் இது தான் நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியா வலுவான நாடாக மாற ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். 70 மணி நேர வேலை, ஒரு நாள் விடுப்பு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை 15 நாள்கள் சுற்றுலா என வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.