நாட்டின் முதல் பிரதமரான நேருவின் வாழ்வில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தாலும் அவரே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.
ஜவகர்லால் நேரு 1959 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பத் பகுதிக்கு அணைக்கட்டு ஒன்றைத் திறந்து வைக்க சென்றார். அது, பழங்குடியினர் வசிக்கும் பகுதி என்பதால் அம்மக்களைக் கௌரவிக்கும் விதமாக நேரு தன்னிடம் கொடுக்கப்பட்ட மாலையை அருகிலிருந்த புத்னி மஞ்சியன் என்கிற 16 வயது பெண்ணுக்கு அணிவித்து தன் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.
சந்தால் பழங்குடியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு, அவரின் வாழ்க்கையைப் புரட்டிபோடும் அளவிற்கான பிரச்னை அங்குதான் ஆரம்பித்திருக்கிறது.
சந்தால் பழங்குடியினரின் வழக்கப்படி, இளம் பெண்ணுக்கு ஓர் ஆண் மாலை அணிவித்தால் அவன்தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். மாலை அணிவித்தவரே கணவன் என்கிற உறுதியான நம்பிக்கையையும் இருந்திருக்கிறது. எதார்த்தமாக, நேரு இச்செயலை செய்திருந்தாலும் அப்பழங்குடியினர் இதைத் திருமணமாகவே கருதினர்.
இதையும் படிக்க: ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவது அவசியம்: மோடி
நேரு அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் அப்பெண்ணை நேருவின் மனைவி எனக் கூறி தங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தனர். மேலும், அப்பெண் பணியாற்றி வந்த அரசு வேலையிலிருந்தும் (தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்) நீக்கப்பட்டிருக்கிறார். ஒருகட்டத்தில், சொந்த சமூகத்தினரின் நெருக்கடி தாங்காமல் ஜார்கண்டுக்குச் சென்ற புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 1985 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதிக்கு சென்றபோது அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் புத்னி மஞ்சியன் நிலையைக் கூறி அவருக்கு உதவ வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். இதைக் கேட்ட ராஜீவ் காந்தி வருத்தப்பட்டதுடன் மீண்டும் தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் அவருக்கு வேலை வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற புத்னி, மாரடைப்பால் நவ.18 அன்று காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.