பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதற்றமாக இருக்கிறார் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்திற்காக அங்கு குவிந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பதற்றமாக இருக்கிறார். ராஜஸ்தானில் அவர் பேரணி நடத்தியது மிகப்பெரிய தோல்வி. வெறும் 9 கிமீ தூரம்தான் பேரணியாக சென்றுள்ளார். அவர்கள் மிகவும் பதற்றமடைந்து வெளியில் இருந்து ஆள்களை வரவழைத்துள்ளார்கள். அவர்கள் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி பேசவே இல்லை.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவது அவசியம்: மோடி
அமலாக்கத் துறை, வருமானவரித் துறை இரண்டும் முக்கியம். பொருளாதார ரீதியாக குற்றம் புரிபவர்களுக்கு எதிராக அவர்களின் பணி இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் சரியாக வலிமையாக இருக்கும். பொருளாதார குற்றங்கள் எதுவும் நடக்காது.
ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இந்த இரு அமைப்புகளின் பணி, பாஜக அல்லாத மாநிலங்களில் எம்எல்ஏக்களை மிரட்டி கட்சி மாற வைத்து ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார்கள். மத்தியப் பிரதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனைகளால் இது நடந்தது. மக்கள் இதை விரும்புவதில்லை' என்று பேசினார்.
மேலும் 'என்னுடைய பணி என்ன என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சித் தலைமை என்ன வேலை கொடுக்கிறதோ அதை நான் செய்வேன்' என்றும் தெரிவித்தார்.