கடந்த 16 நாள்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புது முயற்சியாக இன்று (நவ.27) கையால் தோண்டும் கருவியின் மூலம் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், மீட்புப் பணி தொடர்ந்து பின்னடவை சந்தித்தே வருகிறது.
இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகர்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். இந்த நிலையில், அந்த பிளேடு முழுமையாக அகற்றப்பட்டு, துளையிடும் பணி தொடங்கியிருக்கிறது.
மீதமுள்ள ஒன்பது மீட்டர் (29 அடி) தொலைவுக்கு குழாயைச் செலுத்துவதற்கு, பாறைகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற மனித முயற்சியில் செங்குத்தாக துளையிடும் (rat-hole mining) நுட்பத்தை பயன்படுத்த வீரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கையால் துளையிடும் கருவியின் மூலம் பணியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளூர் அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவப் பொறியாளர்கள், மற்ற மீட்பு அதிகாரிகளுடன் சேர்ந்து, கையால் தோண்டும் புது நுட்பத்தை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். அப்பகுதியில் கடுமையான குளிர் நிலவுவதால், இப்பணி ராணுவ பொறியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.
மீட்புக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர், குழாயைச் செலுத்துவதற்கு மீட்புப் படையினரால் கையால் தோண்டி எடுக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டத்தின் பணி கால் பங்கு நிறைவடைந்துள்ளது.
துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடாதது கவலையளித்தது: இஷான் கிஷன்
இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.