உத்தரப் பிரதேசம் சித்தார்த் நகரில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் வந்து சென்றதால், கோயிலை கங்கை ஆற்று நீர் தெளித்து புனிதப்படுத்தியதாக இந்து அமைப்பு நிர்வாகிகளும் குடிமை அமைப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கோயிலில் நடக்கும் பூஜை ஒன்றிற்காக அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சயீதா கஹூன் சென்றுள்ளார். அடுத்த நாள் அந்தப் பகுதியின் பஞ்சாயித்துத் தலைவர் தர்மராஜ் வெர்மா தலைமையில் இந்தப் புனிதப்படுத்துதல் வழிமுறைகள் நடைபெற்றுள்ளன.
மாட்டு இறைச்சி உண்பவர் வந்து சென்றதால் இந்தக் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. அதனால் கோயிலை மீண்டும் புனிதப்படுத்தும் பணி நடத்தப்பட்டது. இப்போது கோயில் மீண்டும் புனிதமடைந்து கடவுளை வணங்க ஏற்ற இடமாக உள்ளது என தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய கஹூன், பல பிராமணர்களும் அர்ச்சகரும் என்னை அந்த பூஜைக்காக அழைத்தார்கள். நான் எல்லா மதங்களையும் மதிக்கும் நபர். நான் எல்லோருக்குமான சட்டமன்ற உறுப்பினர். என்னை அழைக்கும் அனைத்து இடங்களுக்கும் நான் செல்வேன் எனக்கூறியுள்ளார்.
மேலும், சயீதா கஹூன் அந்தப் பகுதியில் உள்ள பல கோயில்களை புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.