உத்தரகண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனைக்காக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த 12-ஆம் தேதி சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்புப் பணிகள் 17 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக 41 பேரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்து தொழிலாளர்களையும் விமானப் படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சினுக் ரக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், டேராடூன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எய்ம்ஸில் 41 தொழிலாளர்களுக்கும் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும், சிகிச்சை தேவைப்படாதவர்களும் ஓரிரு நாள்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இன்று காலை தொழிலாளர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் உடல்நலன் குறித்து விசாரித்தார்.