மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கும் என்று ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தை மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகின்றது.
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மிசோ தேசிய முன்னணி தனித்து போட்டியிட்டுள்ளது.
அதேபோல், மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாகவுள்ள ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணியின் ஒரே எம்பி லால்ரோசங்கா வாக்களித்து பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும் மிசோ தேசிய முன்னணி அறிவித்ததை தொடர்ந்து, பாஜக 21 தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிட்டது.
மிசோரமில் 15 முதல் 25 இடங்களை கைப்பற்றி ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கும் என்று ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
இதையும் படிக்க: மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்!
மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் 5 முதல் 9 இடங்களையும், பாஜக 0 முதல் 2 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஜன் கி பாத் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மிசோ தேசிய முன்னணி 3-7 இடங்களையும், காங்கிரஸ் 2-4 இடங்களையும், பாஜக 0-2 இடங்களையும், ஜோரம் மக்கள் இயக்கம் 28-35 இடங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.