இஸ்ரேல் - காஸா இடையிலான போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற காஸா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பரெய்லி பகுதியைச் சேர்ந்தவர் சுஹையில் அன்சாரி. காவலரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்கிம்பூர் பகுதியில் பணியிடமாற்றம் பெற்றுள்ளார். அங்கு நகரக் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில், அவர்களுக்கு ஆதரவான பதிவை ஒருமுறை ஷேர் செய்தால், ஒரு டாலர் கிடைக்கும் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய லக்கிம்பூர் துணை காவல்கண்காணிப்பாளர் சந்தீப் சிங், லக்கிம்பூர் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர், பாலஸ்தீனம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். முகநூலில் ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டு நிதி திரட்டும் பணியையும் செய்துள்ளார். இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.