பதின்பருவ ஆண்கள் மற்றும் பெண்கள், தங்களின் பாலியல் வேட்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் (போக்சோ) தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசிய, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாதத்தைத் தொடர்ந்து, பதின்பருவ ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வழிகாட்டுதல்களை அளித்துள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
கடந்த ஆண்டு பதின்பருவ ஆண் ஒருவருக்கு, போக்சோ சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணுடன் உடலுறவு கொண்ட வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, அமர்வு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
இதற்கான மேல்முறையீட்டில் பெண்ணின் தரப்பில், அந்த ஆணுடன் தான் விரும்பியே பழகியதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய சட்ட விதிகளின்படி, 18 வயதுக்குக் குறைவான நபர் தெரிவிக்கிற பாலியல் உறவுக்கான ஒப்புதல் செல்லாதது மற்றும் அவருடன் உடலுறவு கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் அத்துமீறலாக கருதப்படும்.
இரு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, ``எந்தவொரு பெண்ணும் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ளுங்கள். இரண்டு நிமிட சந்தோஷத்திற்காக அடிபணிந்தாலும், இந்த சமூகத்தின் பார்வையில் பெண்ணே ஏமாளியாகக் கருதப்படுவார்”
இதையும் படிக்க: தில்லியில் மேல்தட்டு மக்களுக்காக பிரீமியம் பேருந்துகள் அறிமுகம்!
மேலும், உடல் மீதான உரிமை, கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை காப்பது இளம்பெண்ணின் கடமை என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அதே வேளையில் இளம் ஆண்களுக்கான கடமையாக நீதிமன்றம் குறிப்பிடுவது, மேற்குறிப்பிட்ட பெண்ணின் கடமைகளை மதிப்பதும் அவர்களின் சுமரியாதை, கண்ணியம், தனியுரிமை மற்றும் உடல் மீதான உரிமைகளை மதிக்கவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கும் இளம்பருவத்தினருக்கும் உரிமைகள் அடிப்படையிலான விரிவான பாலியல் கல்வி கொடுக்க வேண்டியிருப்பதன் தேவையையும் கொல்கத்தா நீதிமன்றம் தனது விரிவான தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.