நாடு முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பணியின் போது மரணமடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 188 ஆக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியின்போது மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களின் தியாகத்தை, நாடு ஒருபோதும் மறக்காது என்றும் குறிப்பிட்டார்.
தேசிய காவல்துறை நினைவுதினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய காவல் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசுகையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியின்போது, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில் 188 காவலர்கள் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
நாட்டிற்கு சேவை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடினமான பணி உள்ளது - அது பகல் அல்லது இரவு, குளிர்காலம் அல்லது கோடை, பண்டிகை அல்லது வழக்கமான நாள் என எதுவும் கிடையாது. காவல்துறையினருக்கு தங்கள் குடும்பத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட வாய்ப்பு கிடைப்பதில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
காவல்துறையில் பணியாற்றுவோர், தங்களது வாழ்நாளில் மிகவும் முக்கியமான காலத்தை குடும்பத்தை விட்டு விலகி, நாட்டைப் பாதுகாக்கும் பணிக்காகவே செலவிடுகிறார்கள் என்றும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை பாதுகாப்புப் பணியின்போது மரணமடைந்த 36,250 காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.