ஜார்க்கண்டின், கோடெர்மாவில் சாலையோரத்தில் பானிபூரி சாப்பிட்ட பெண்கள், சிறுமிகள் உள்பட 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை லோகாய் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கோசைன் தோலாவில் தெருவோர வியாபாரி ஒருவரிடமிருந்து கோல் கப்பா எனப்படும் பானிபூரி சாப்பிட்டதால் சுமார் 40 சிறுவர்கள் மற்றும் 10 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பானிபூரி சாப்பிட்ட பிறகு பெண்கள், சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோடெர்மாவில் உள்ள சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 24 மணி நேரக் கண்காணிப்பில் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 9 முதல் 15 வயதுக்குள்பட்டவர்கள். சிகிச்சைக்குப் பிறகு அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விற்பனையாளரிடம் மீதமுள்ள பானிபூரியை பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் பரிசோதனைக்காக ராஞ்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.