உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாதென்றால் சன்மானத்தை உயர்த்தத் தயார் என்று உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக்கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரூ.10 இருந்தால் நானே தலையை சீவிக்கொள்வேன்: உதயநிதி பதிலடி!
மேலும், உதயநிதியின் தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் அவரின் தலையைத் துண்டிப்பேன். உதயநிதி தலையைத் துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன் என கேலியாக பதிலளித்தார்.
இந்த நிலையில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாதென்றால் சன்மானத்தை உயர்த்தத் தயார் என்று உத்தரப் பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அவருடைய தலையை வெட்டுவதற்கு ரூ.10 கோடி போதாதென்றால் சன்மானத்தை அதிகப்படுத்துவேன். ஆனால் சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாட்டில் எத்தகைய வளர்ச்சி ஏற்பட்டாலும் அதற்கு காரணம் சனாதனம் தான். நாட்டிலுள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.