ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு (செப். 12) ஒத்திவைத்து விஜயவாடா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலை சரியில்லாததன் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அவரை ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், ‘விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை’ என அறிக்கை சமா்ப்பித்தனா். அதைத் தொடா்ந்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததன் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைப்பதற்கு பதில் வீட்டுக்காவலில் வைக்கக்கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையிலேயே உரிய மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், சந்திரபாபுவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.