புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதிக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இடது ஜனநாயக முன்னணி கூட்டணி வேட்பாளர் ஜெயிக் தாமஸைவிட 37,719 வாக்குகள் அதிகம்.
இதன் மூலமாக சாண்டி உம்மன் தனது தந்தை உம்மன் சாண்டியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி 33,255 வாக்குகள் வித்தியாசம் என்பதே அதிகபட்சமாக இருந்தது. இதனை சாண்டி உம்மன் இப்போது முறியடித்துள்ளார்.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் சாண்டி உம்மன் எம்எல்ஏவாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.