பாரத்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் ஹந்த்ரா கிராமம் அருகே ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரெய்லர் மோதியதில் 11 பேர் பலியாகினர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்து பேருந்து புதன்கிழமை அதிகாலை, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள ஹந்த்ரா கிராமத்திற்கு அருகே ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது.
இதையடுத்து பேருந்தை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது பயணிகள் சிலர் பேருந்தில் இருந்து இறங்கி கீழே நின்று கொண்டிருந்தனர். சிலர் பேருந்துக்குள்ளேயே இருந்தனர்.
அப்போது, பாரத்பூரில் இருந்த வந்து கொண்டிருந்த டிரெய்லர் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் மருத்துவமனையின் சடலங்கள் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முதல்வர் இரங்கல்:
பாரத்பூர் சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் 'எக்ஸ்' பதிவில் தெரிவித்திருப்பதாவது: "குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த பேருந்து திடீரென, ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தபோது பாரத்பூரில் இருந்த வந்த டிரெய்லர் மோதியதில் 11 பேர் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு "இறந்த அனைவரின் ஆன்மாக்களுக்கும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.