'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து கடந்த செப். 1 அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க | ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் தில்லியில் ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.