புது தில்லி: இந்திய ராணுவத்தின் வருடாந்திர ராணுவ தின அணிவகுப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி நிகழ்ச்சியை உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் நடத்தவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி தேசிய தலைநகர் பகுதியில் அனுசரிக்கப்பட்டு வந்த இந்திய ராணுவ தின அணிவகுப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சிக்கு ஏற்ப, கடந்த ஆண்டு முதல், தேசிய தலைநகருக்கு வெளியே நடத்த முடிவு செய்யப்பட்டது மற்றும் 75 ஆவது ராணுவ தின அணிவகுப்பு பெங்களூருவில் நடைபெற்றது.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் டிரக் மீது பேருந்து மோதல்: பள்ளி முதல்வர், மாணவி பலி
இந்த நிலையில், “வரவிருக்கும் 2024 ஜனவரி 15 ராணுவ தின அணிவகுப்பை லக்னௌவில் நடத்தவுள்ளதாக” ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்த நடவடிக்கையானது பொது ஈடுபாட்டை அதிகரிப்பது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் ராணுவத்தின் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சுழற்சி என்பது நகரங்களை மாற்றுவது மட்டுமல்ல, பல்வேறு நிகழ்வுகளுக்கு கவனத்தை மாற்றுவதும் ஆகும், அவை ஒவ்வொன்றும் நாட்டின் பாதுகாப்பில் தனித்துவமான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நமது ராணுவம் செயல்படும் தனித்துவமான கலாசார மற்றும் பிராந்திய பின்னணியை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.