புதுதில்லி: பாஜக கூடாரத்தில் இன்னும் இருப்பது எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான் என்று அதிமுக விலகலுக்கு பின்னர் முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியாத திங்கள்கிழமை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமாந கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அதிமுக விலகி உள்ளது. இன்னும் பாஜகவுடனான கூட்டணியில் இருப்பவர்கள் எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்.
அதாவது, மகாராஷ்டிராவில் உள்ள அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள்தான் உள்ளன.
பாஜக, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.