
மத்திய ஆயுத காவல் படையில் சேர விரும்புவோா் தமிழில் தோ்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டதற்காக பிரதமருக்கு தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: மத்திய ஆயுத காவல் படையில் சேர விரும்பும் தமிழ்நாட்டை சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இனி தமிழில் அவா்கள் தோ்வை எழுதலாம். இதற்காக தமிழக மக்கள் சாா்பாக பிரதமா் மோடிக்கு நன்றி.
மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: மத்திய ஆயுத காவல் படை தோ்வை 13 மொழிகளில் எழுதலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.