கர்னால்: ஹரியாணா மாநிலம் கர்னாலில் மூன்று மாடிகளைக் கொண்ட அரிசி ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 24 பேர் மீட்கப்பட்டனர். அதில் 4 பேர் பலியாகிவிட்டனர். 20 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசி ஆலைக் கட்டடம் இடிந்துவிழுந்தபோது, அந்தக் கட்டடத்தில் குறைந்தது 150 தொழிலாளர்கள் இருந்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், மாநில பேரிடர் மேலாண்மைப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் உள்ள கர்னாலில் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் அரிசி ஆலை இயங்கி வந்தது. இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், அரிசி ஆலை தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்ததும் அரிசி ஆலைக்குள் தூங்குவது வழக்கம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.