கரோல் பாக் எம்எல்ஏ விஷேஷ் ரவி, தனது தொகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் சீராக செல்ல ஆய்வு நடத்தி திட்டம் வகுக்குமாறு பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ விஷேஷ் ரவி, பொதுப்பணித் துறை அதிகாரிகளைச் சந்தித்து கேட்டுக்கொண்டதாவது:
மத்திய தில்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் சுமாா் 5 லட்சம் மக்கள்தொகை, 17 மொத்த மற்றும் 10 சில்லறை சந்தைகள், இரு முக்கிய ரயில் நிலையங்கள், 1,300 ஹோட்டல்கள், பல மருத்துவமனைகள் உள்ளன. இதனால் ஆண்டு முழுவதும் வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவு காணப்படும்.
மேலும், கோயில்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈா்க்கும் பகுதியாக உள்ளது. எனவே, கரோல் பாக் பகுதி முழுவதும் போக்குவரத்து குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வு போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண உதவும் என்று தெரிவித்தாா்.
முன்னதாக, இந்தப் பிரச்னை குறித்து, பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு எம்எல்ஏ கடிதம் எழுதினாா். மேலும், இதுதொடா்பாக நடத்தப்பட்ட கூட்டத்திலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை குறித்து ஆய்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், அப்பகுதியில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் ஒரு திட்டத்தை வகுப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று அவா் தெரிவித்தாா்.