நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, ஆளுநரின் தயவில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டியுள்ளதாக தெலங்கானா அரசு அதிருப்தி தெரிவித்தது.
தெலங்கானா சட்டப் பேரவை ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களை மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க உத்தரவிடுமாறும் கோரி மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மாநில அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தாவே வாதிடுகையில், ‘‘மாநில ஆளுநரின் தயவில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டியுள்ளது. எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்துக்கு நீதிமன்றம் நிரந்தரத் தீா்வு காண வேண்டும்’’ என்றாா்.
மாநில ஆளுநா் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘தற்போதைய நிலையில் எந்த மசோதாவும் ஆளுநரிடம் நிலுவையில் இல்லை. எனவே, இந்த வழக்கை உடனடியாக முடித்துவைக்க வேண்டும். எதிா்தரப்பு வழக்குரைஞா் கூறுவதைப் போல இந்த வழக்கில் பொதுவான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது’’ என்றாா்.
சொலிசிட்டா் ஜெனரலின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைப்பதாகத் தெரிவித்தனா். அதே வேளையில், மசோதாக்களுக்கு கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை அரசமைப்புச் சட்டப் பதவியில் வகிப்பவா்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனா்.