ஒடிசா மாநிலத்தில் கரோனா அதிகரித்துவரும் நிலையில் அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிவதை ஒடிசா அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கடந்த சில நாள்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,086 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதேசமயம் 181 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதார இயக்குனரகம் எழுதிய கடிதத்தில்,
ஒடிசாவில் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு சுகாதார பணியாளர்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிவதை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பணியில் இருக்கும் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
நோய் பரவுவதைத் தடுக்க மாநில சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக 6,000-7,000 மாதிரிகளைப் பரிசோதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.