

பிரதமர் மோடியை விஷப் பாம்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்து பேசியதற்கு பாஜக தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் அவரது வெறுப்பு பேச்சுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மல்லிகார்ஜுன கார்கே பாஜகவின் சித்தாந்தத்தை விமர்சித்ததாக கூறுகிறார். அவர் பிரதமர் மோடியின் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திவிட்டு பின்பு சமாளிக்கிறார். அவரது இந்த செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
முன்னதாக கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தவறு செய்யாதீர்கள். மோடி விஷம் நிறைந்த பாம்பு போன்றவர். நீங்கள் அப்படி இல்லை என்று கூறுவீர்களேயானால், தீண்டியபின் உங்களுக்கு அது உண்மை என்று தெரியும். அதனால், தீண்ட விடாதீர்கள். தீண்ட விட்டால் நீங்கள் இறந்து விடுவீர்கள். இல்லை அது விஷமல்ல என்று நம்பினால் நிரந்தரமாக தூங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பாஜக பாம்பு போன்றது என்றும், அதன் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தான் கூறினேன். அதன் சித்தாந்தத்தை ஆதரித்தால் இறப்பு உறுதி. நான் அவருக்கு ( பிரதமர் மோடி) எதிராக எதுவும் பேசவில்லை. நான் தனிப்பட்ட நபர் மீது எனது விமர்சனத்தை முன்வைக்க மாட்டேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.