மிசோரம் பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், 78 வயது முதியவர் ஒருவர் 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளது பலரைக் கவர்ந்துள்ளது.
ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஆங்கில நாளேடுகளைப் படிக்க வேண்டும் என்ற இலக்கிற்காக பள்ளியில் சேர்ந்து படிப்பதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. 78 வயதான இவர், தற்போது 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற சேர்க்கையின்போது, தான் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து பள்ளியில் சேர்ந்துள்ளார்.
அவருக்கு பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கியுள்ளது. சக மாணவர்களுடன் அமர்ந்து முதியவரும் கல்வி கற்கும் புகைப்படங்களை இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது. மிசோரம் - மியான்மர் எல்லையைக் கடந்து 3 மணிநேரம் பயணித்து பள்ளிக்கு வந்து செல்கிறார்.
வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த லால்ரிங்தாரா, சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் 2ஆம் வகுப்பு வரை பயின்றிருந்தார்.
எனினும் தன்னம்பிக்கை கொண்ட அவர், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கல்வி கற்பதைத்தொடர்ந்துள்ளார். இடையில் 1995ஆம் ஆண்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார்.
எனினும் சூழல் காரணமாக கல்வியைத் தொடரமுடியவில்லை. தற்போது 78 வயதான பிறகு மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளார். கல்வி அறிவைப் பெறுவதற்கு வயது தடையல்ல என்பதை உணர்ந்ததால், வயதைப் பொருட்படுத்தாமல் பள்ளியில் சேர்ந்ததாக லால்ரிங்தாரா குறிப்பிடுகிறார்.
சொந்தமாக ஆங்கில விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் ஆங்கில நாளேடுகளை படிக்க வேண்டும் என்பதும் தனது வாழ்நாள் இலக்காக கொண்டு பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரமித்துள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் அந்த முதியவர்.