மணிப்பூர் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் பிரேன் சிங் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று(செவ்வாய்க்கிழமை) விவாதம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மணிப்பூர் விவாகரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க | சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டது ஏன்? டி.ஆர்.பாலு
அப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, 'மணிப்பூரில் சுமார் 10,000 கலவரம், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. நாம் மிகவும் உணர்ச்சியற்றவர்களாக ஆகிவிட்டோமா? இதுதான் அந்த மாநில அரசின் பிரச்னை. மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்கு அந்த மாநில முதல்வர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்' என்றார்.
அதுபோல சமாஜவாதி எம்.பி. டிம்பிள் யாதவ், 'மணிப்பூர் சம்பவம் மிகவும் உணர்ச்சிகரமானது. இந்த விஷயத்தில் அரசு மிகவும் அலட்சியமாக இருக்கிறது. இது ஒரு திமிர் பிடித்த அரசு. மணிப்பூர் சம்பவங்கள் முற்றிலும் மனித உரிமை மீறலாகும். வன்முறையை நிகழ்த்துவதற்கு பெண்களை கருவியாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அரசு ஆதரவுடன் நடைபெற்ற இன வன்முறை.
மணிப்பூரில் எத்தனை வழக்குப்பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 14,000 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்களைப் பாதுகாப்பது முதலமைச்சரின் பொறுப்பு. அரசு விரும்பியிருந்தால், இந்த வன்முறையை இரண்டு நாட்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
பிரதமரை நாடாளுமன்றத்தில் வந்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால், வெறுப்பு மற்றும் பிரித்தாளும் அரசியலை பாஜக செய்கிறது' என்று பேசினார்.