சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு பெண்கள் சக்தியும் ஒரு காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
பெங்களூருவில் உள்ள ஏஜென்சியின் கட்டளை மையத்தில், நாட்டின் மூன்றாவது நிலவு பயணத்தின் பின்னணியில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சனிக்கிழமை பார்வையிட்டார்.
தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தில்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் பாஜக, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுடனான தனது சந்திப்பையும், பெங்களூரில் தனக்கு கிடைத்த அன்பான வரவேற்பையும் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இது மிகவும் உற்சாகமாக இருந்தது என்று தெரிவித்தார்.
இஸ்ரோவின் மகத்தான வெற்றியைக் கொண்டாட, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சாதனையைக் கொண்டாட இது எனக்கு ஒரு வாய்ப்பையும் அளித்துள்ளது. உங்கள் அனைவருடனும் இருப்பது அதிர்ஷ்டமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன் மிக்க நன்றி என்றார்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.